லண்டன் ஒலிம்பிக் போட்டியின் "ஸ்பான்சராக' சர்ச்சைக்குரிய "டவ் கெமிக்கல்ஸ்' நிறுவனம் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் எண்ணம் இல்லை, என்று இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1984ல் ம.பி.,யின் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு இன்னும் முறையான நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனிடையே யூனியன் கார்பைடு நிறுவனத்தை, அமெரிக்காவின் "டவ் கெமிக்கல்ஸ்' வாங்கியது.
இந்த நிறுவனம் லண்டனில் வரும் 2012ல் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியின் "ஸ்பான்சராக ' உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஒலிம்பிக்கில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக நேற்று டில்லியில் நடந்த இந்திய ஒலிம்பிக் சங்கத்தின்(ஐ.ஓ.ஏ.,) செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. இதில், போட்டியை புறக்கணிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து ஐ.ஓ.ஏ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,""ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் முடிவுக்கு உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை. இம்முடிவு ஒலிம்பிக் உணர்வுக்கு எதிரானது என கருத்து தெரிவித்தனர். "டவ் கெமிக்கல்ஸ்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் அனுப்ப உள்ளோம். அதில், இந்திய மக்களின் ஆதங்கத்தை தெரியப்படுத்துவோம். அடுத்து நடக்க உள்ள ஐ.ஓ.ஏ., பொதுக் குழு கூட்டத்தில் இப்பிரச்னை பற்றி விரிவாக விவாதிக்கப்படும்,''என்றார்.
0 கருத்துரைகள்:
Post a Comment