இந்திய டென்னிஸ் நட்சத்திரங்கள் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி மீண்டும் பிரிந்து விளையாட முடிவு செய்திருப்பதற்கு
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆதரவு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பயஸ்-பூபதி இருவரும் இணைந்து மூன்று அல்லது நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடியபோதும் பதக்கம் வெல்லவில்லை என்பதுதான் உண்மை. அவர்கள் இருவரும் அனுபவம் வாய்ந்த வீரர்களாக இருக்கலாம். ஆனால் பதக்கம் வென்றதில்லை. இந்த விவகாரத்தில் மகேஷின் பார்வை உயர்வானது. இந்த விஷயத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து இந்திய டென்னிஸ் சங்கமும், அதன் தலைவரும்தான் முடிவெடுக்க வேண்டும். எனவே பொறுத்திருந்து பார்ப்போம். 8 மாதங்கள் என்பது டென்னிஸ் வீரர்களின் வாழ்க்கையில் நீண்ட காலம் ஆகும். இந்த காலத்தில் நிறைய மாற்றங்கள் நடக்கும்.
என்ன நடந்தாலும் சரி, நாம் சிறப்பான அணியை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புவோம். சிறப்பாக ஆட முயற்சிப்போம். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போது ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின், இப்போது அதிலிருந்து குணமடைந்து வருகிறேன். உடற்தகுதிக்காக தினந்தோறும் இரண்டு மணி நேரம் விளையாடி வருகிறேன். டிசம்பர் 31-ம் தேதி நியூஸிலாந்தில் தொடங்கவுள்ள டென்னிஸ் போட்டியில் விளையாடவிருக்கிறேன் என்றார் அவர்.
இந்திய டென்னிஸ் நட்சத்திரங்களான பயஸ்ம், பூபதியும் கருத்து வேறுபாடு காரணமாக 2002-ம் ஆண்டு பிரிந்தனர். அதன்பிறகு 9 ஆண்டுகள் கழித்து இணைந்த இவர்கள், ஓர் ஆண்டு நிறைவடைவதற்குள்ளேயே மீண்டும் பிரிந்துவிட்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment