தமிழிலக்கியம் என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் என்ற நிலை மாறி இன்று உலகெங்கும் புலம் பெயர்ந்த தமிழர்களால் மட்டுமன்றி பல வெளிநாட்டவர்களாலும் செழுமைபடுத்தப் படுகிறது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் வாழும் எண்ணற்ற தமிழர்கள் இன்றும் சிறந்த படைப்புகளை வெளியிட்டு தமிழை உன்னத நிலைக்குக் கொண்டசெல்கின்றனர். இக்கட்டுரையில்சிங்கப்பூரில் தமிழ் வளர்த்த இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான திரு ந. பழநிவேலு அவர்களை பற்றிப் பார்ப்போம்.
சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய வளர்ச்சி:
சிங்கப்பூர் கலாசாரப் பின்னணியில் எழுதப்பட்ட சிங்கப்பூரின் ஆரம்ப கால இலக்கியங்கள் கவிதை வடிவிலே இருந்தன. 1872 ஆம் ஆண்டு எழுதப்பட்ட முனாஜாத்து என்ற நூல் இஸ்லாமிய நூலாகும். 1887 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சி. ந. சதாசிவ பண்டிதர் அவர்களால் உருவாக்கப்பட்ட சிங்கை நகரந்தாதி, சித்திரகவிகள் ஆகிய இரண்டும் சிங்கப்பூர் சுப்பிரமணிய சுவாமிமேல் பாடப்பெற்றவை. அடுத்து நா. வ. ரங்கசாமி தாசனின் அதிவினோத குதிரைப் பந்தய லாவண¢ (1893), க. வேலுப்பிள்ளையின் சிங்க முருகேசர் பதிகம் (1893), முகமது அப்துல் காதரின் கீர்த்தனை திரட்டு (1896) ஆகிய நூல்களும் சிங்கைத் தமிழ் இலக்கிய முன்னோடி நூல்களாகக் கருதப்படுகின்றன. இதில் அதிவினோத குதிரைப் பந்தய லாவணி, தமிழ் மூதாதையர் எவ்வாறு தஞ்சை மாவட்டப் பகுதியிலிருந்து கப்பலில் சிங்கப்பூர் வந்து குடியேறித் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர் என்பதைச் சித்தரிக்கிறது. மற்ற நூல்கள் யாவும் பக்தி நூல்களே.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1935லிருந்து சிங்கைத் தமிழ் இலக்கியத்தில் மாற்றம் ஏற்படலாயிற்று. சமய இலக்கியங்கள் குறைந்து சமுதாயச் சிந்தனையுள்ள இலக்கியங்கள் தோன்றின. தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் தமிழ் முரசு நாளிதழ் மற்றும் சீர்திருத்தம் என்ற மாத இதழ் வெளிவரத் துவங்கியதும் சமூக உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதைகள், நாவல்கள், நாடகங்கள் என இலக்கியம் வளர்ச்சி கண்டது. சிங்கப்பூரின் தமிழ்க் கவிதை எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்களாகிய திரு ந. பழநிவேலன், சிங்கை முகிலன் ஆகியோரின் படைப்புகள் சீர்திருத்த உணர்வோடும் துடிப்போடும் விளங்கின. சாதிமதக் கொடுமை, கிழமணக் கொடுமை, ஈழத் தமிழ் அதிகாரிகளின் அதிகாரத்திற்கு உட்பட்ட தென்னிந்த¢யத் தமிழர்களின் அவல வாழ்க்கை, சாதி ஒழிப்பு, கைம்பெண் மணம், பொருந்தா மணம், மத ஊழல் எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு, மதச் சீர்திருத்தம், இதிகாச எதிர்ப்பு முதலிய பல சீர்திருத்தக் கருத்துக்கள் திரு ந. பழநிவேலுவின் படைப்புகளில் மிளிர்ந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாளிதலாகத் தொடங்கப்பட்ட மலாயா நண்பன், தமிழ் முரசு பல எழுத்தாளர்களையும் பத்திரிக்கையாளர்களையும் உருவாக்கியது.
0 கருத்துரைகள்:
Post a Comment